Friday, October 14, 2011

விடைதெறியாக் கேள்விக்குறிகள்..

எல்லோருக்கும் போலதான் எனக்கும் ஒவ்வொரு நாளும் விடிகிறது. எல்லா நாட்களிலும் ஏதாவது ஒரு சேர்மானம் சேர்ந்துகொண்டே வருகிறது அப்படிப்பட்ட ஒரு நாளைத்தான் உங்களுடன் பகிரப்போகிறேன்.

கண்டீப்பாக இது உங்கள் பொழுதுப்போக்குப்பதிவோ, நகைச்சுவைப் பதிவோ சினிமா பதிவோ தரும் உணர்வைத் தராது அதற்காக மன்னிப்புகேட்டுகொள்கிறேன்.


வழக்கமான மரணவீடாய் இல்லாமல் சந்தோஷ இளையோடல்கள் இருந்து கொண்டே இருந்தது என் பெரியப்பாவின் மரணம். காரணம் என் பெரியப்பாவின் வயது 87, அவரின் மனைவி மக்களே அவரின் மரணத்தை எதிர்நோக்கி காத்திருந்த காலக்கட்டத்தில்தான் நடந்தது அவரின் மரணம். அவரின் மரணம் எங்கள் சொந்தங்களின் ஒரு மற்றுமொருச் சங்கமமாக மட்டுமே இருந்தது.

87வயது வரை யாருக்காக வாழ்ந்தாரோ அவர்களே அவரின் மரணத்தை எதிர்ப்பார்த்து காத்திருந்திருப்பார்களானால் அந்த மனிதன் இத்தனை வருடம் வாழ்ந்த வாழ்க்கையே கேள்விக்குறியாகத்தான் வளைந்து நிற்கிறது.

முதுமை அவர்களை குழந்தையாக மாற்றுகிறது. எல்லோரிடமும் அன்பையும் அரவணைப்பையும் எதிர்ப்பார்க்கிறது. எல்லோரும் தன்னை கவனிக்க வேண்டும் என்று ஏங்கிறது. ஆனால் ஒரு முதியவரை ஒரு சமுதாயமும் அவரின் குடும்பமும் ஓடித்தேய்ந்த சைக்கிளைப்போல் மட்டுமே பார்க்கிறார்கள். என்றாவது ஒரு நாள் அதைத் தூக்கி ஓரமாய்ப்போடக் காத்திருக்கிறார்கள்.

இப்படி ஒரு மரணம் என்னையும் பெரிதாய் பாதிக்கவில்லை, எவ்வித உணர்வும் இல்லாமல் சென்னையை நோக்கி கிளம்ப சேலம் பஸ்நிலையத்திற்கு வந்து சேர்ந்தேன். சேலம் பஸ்நிலையம் எப்போதும் விபச்சாரத்திற்கு பெயர் போனது. பெங்களூர் பஸ் நிறுத்தம் அருகே அவர்கள் எப்போதும் இருப்பார்கள்..



அன்று அதேபோல் 2 பெண்களும், 3 திருநங்கைகளும் வாடிக்கையாளர் தேடி வந்து சேர்ந்திருந்தார்கள். 2 பெண்கள் குடும்பப்பெண்களைபோலவும், திரிஷா போல் பச்சைக்குத்திய ஒரு திருநங்கையும், முகம் முழுக்க மேக்கப் போட்டிருந்த ஒரு திருநங்கையும் இவர்களுடன் ஒரு சுமாரான ஒரு திருநங்கையும் வழியில் போகும் ஆண்களிடன் மெதுவாக அணுகி " போகலாமா" கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

அவர்களை வம்புக்கு இழுக்கும் வாலிபர்களையும், கிண்டல் செய்து சத்தமாய் பேசிக்கொண்டிருந்தவர்களையும் அவர்கள் பொருட்டாகவே கருதாமல் போனிலும், நேரிலும் அவர்கள் தொழிலைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். 4பேர் கஷ்டமர்களுடன் கிளம்ப ஒரு சுமாரான அழகி மட்டும் தனியே காத்திருக்க வேண்டியதாகி போயிருந்தது..

இவர்களும் சாமானியர்கள்தானே?? இவர்களுக்கும் நம்மைப்போல் வாழும் ஆசை இருக்கத்தானே செய்யும்?? மற்றவர்கள் தேவைக்கு பயன் படும் இவர்களை சமுதாயம் எப்போதும் இழிவாகத்தானே பார்க்கிறது இதைத் தெரிந்தும் இவர்கள் இதைச்செய்யக்காரணம்?? அவர்கள் வாழவேண்டும் என்ற கட்டாயம்தானே??

இதற்குபதிலாய் சாகலாம் என்று அதிமேதாவித்தனம் பேசுபவர்களுக்கு நான் பதில் சொல்லப்போவது இல்லை.. எதோ ஒரு நிலையில் இந்தசமுதாயம் இவர்களை இந்த நிலைக்குத்தள்ளி இருக்கிறது..


இந்த நேரத்தில் என் முன்னே மிக பரிதாபமான நிலையில் நொண்டிக்கொண்டு வந்தாள் ஒரு வயதான பாட்டி 10ரூபாய் கொடுத்ததும் கும்பிடு போட்டார். எதிரே இருந்த சிறு திட்டை அவளால் ஏற முடியாமல் மிக சிரமப்பட்டு கொண்டிருந்தவளை கை பிடித்து மேலேற்றி ஒரு தூண் ஓரத்தில் உட்கார வைத்தேன். அவளைப்பார்க்க மிக பரிதாபமாக இருக்க டீ சாப்பிடுறீங்களா என்றேன். ம் என்றாள். டீ வாங்கி கொடுத்து விட்டு அவளிடம் நீங்க எந்த ஊர் என்றேன் "விருதாச்சலம்" யாரும் இல்லையா " வீட்டுகாரர் இல்ல" ஒரே ஒரு பையன் மட்டும்" பையன் என்ன பண்றார் " மேஸ்திரி" நீங்க ஏன் அவங்களை விட்டுட்டு வந்தீங்க?? அவன் பொண்டாட்டி பேச்சை கேட்டுட்டு தினமும் அடிக்கிறான், மருமகள் சோறு போட மாட்டேங்குறா அதான் வந்துட்டேன் வந்து 3 மாசம் ஆச்சு யாரும் என்னைத் தேடி வரல என்றார்.

சாப்டிங்களா என்றேன், மதியம் வாங்கினேன் சாப்பிட்டு கொஞ்சம் நைட்டுக்கு வச்சிருக்கேன். கால் ரொம்ப வலிக்குது படுக்கணும் இப்போ படுத்தா போலீஸ் காரங்க வந்து விரட்டுவாங்க, 2 நாள் முன்னாடி படுத்திருந்தப்போ 2 குடிகாரங்க சண்டை போட்டு கால் மேல விழுந்துட்டாங்க அதான் அடிபட்டுடுச்சு..அதானாலதான் நடக்க முடியல என்றாள். இப்படியே போய் ஒண்ணுக்கு போயிட்டு திரும்ப வந்து படுத்துக்குவேன்.

ஏன்மா இப்படி?? எவ்ளோ நாள் கஷ்டப்படுவீங்க?? என்னப்பா பன்றது?? இங்க இங்கயே இப்படி வாங்கி தின்னுட்டு சுத்திட்டு இருப்பேன், இருக்க 4 கடைக்காரங்ககிட்ட சொல்லி இருக்கேன் நான் செத்துட்டா தூக்கி புதைச்சுடுவாங்க என்று சொல்லிவிட்டு சரிப்பா நான் கிளம்புறேன் என்றார்.. என்னிடம் எந்த வார்த்தையும் இல்லை, என்னைப்போல் ஒரு சக உயிர் எனக்கு உண்டான இதே கனவுகளையும், ஆசைகளையும் சுமந்த உடல் இன்று இந்த பூமியை விட்டு போகும் நாளுக்காக காத்திருக்கிறது. என்னால் இதை எப்படி மாற்ற முடியும்? எதுவும் தோன்றவில்லை. 100 ரூபாயைக் நீட்டி நாளைக்கு டாக்டரைப்பாருங்கன்னு சொன்னேன்.

அவர் அந்த காசை வாங்க வில்லை வேண்டாம்யா நீயே வச்சுக்கோ, இது சரியா போயிடும்னு சொன்னாள். இல்லம்மா இதை வச்சுக்கோங்க நாளைக்கு சாப்பாட்டுக்காவது வச்சுக்கோங்கன்னேன். வாங்கிட்டு கொஞ்ச நேரம் அமைதியா இருந்துட்டு சொல்லிட்டு கெளம்பிட்டாள்.

கிட்டத்தட்ட 70 வருட வாழ்க்கையில் அவள் சம்பாதித்தது என்ன? முடியாத காலத்தில் சாப்பாடு கூட இல்லாமல் சாவை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறாள்.

வார்த்தைகளற்று பார்த்துகொண்டிருக்கிறேன் வாழ்க்கையை எனக்கான முடிவு என்னவாக இருக்கும்??

Wednesday, February 2, 2011

பெண் என்ன செய்தாள்..???


நீண்ட இடைவெளிக்குப் பின்னும், பெரிய யோசனைக்குப் பிறகுதான் இதை எழுத ஆரம்பித்திருக்கிறேன். காரணம், இயற்கையின் படைப்பில் அனைத்து உயிர்களுக்கும் சமமாய் அளிக்கப்பட்ட உரிமைகளே சக உயிருக்கு மறுக்கப்படுவது ஏன் என்ற கேள்விதான் இந்தப்பதிவு..

நாம் என்னதான் சட்டதிட்டங்கள் வைத்து வளர்ந்தாலும் படைப்பின் சாரம்சம் ஒன்றே ஒன்றுதான் அது "ஒரு அப்பா அம்மாவுக்கு பிறந்து, ஒரு அப்பா அம்மாவாக மாறி, ஒரு அப்பா அம்மாவை இந்த பூமிக்குத் தருவது" நா.பார்த்த சாரதியின் குறிஞ்சி மலர் வரிகள். கோடிகள் சம்பாதித்தாலும், 24 மணிநேரம் எனக்கு போதவில்லை என்று உழைத்தாலும் இது மட்டுமே சாரம்சமாக இருக்கிறது.

மக்களுக்காக வாழ்ந்தவர்கள் மட்டுமே இதில் விதிவிலக்கு, மக்கள் மனங்களில் வரலாறாக அவர்கள் கொண்டு சேர்க்கப்படுகிறார்கள். அதனால் அவர்களின் ஆயுள் காலம் நீடிக்கப்படுகிறது. சிலர் சாகவரமும் பெறுகிறார்கள். ஹிட்லர் நல்லது பன்னாரா அவரும்தானே வரலாற்றுல இருக்காருன்னு கேள்வி கேட்க கூடாது.

இனவிருத்தியே பாலுணர்வின் அடிப்படை நோக்கமாக இருந்தாலும், மனிதன் இனவிருத்தியையும் தாண்டி அதில் சந்தோசம் அனுபவிக்கிறான் என்பதே உண்மை. இருக்கிறது அனுபவிக்கிறான், அது அவனுக்கு கிடைத்த வரப்பிரசாதம் அனுபவிக்கிறான். எல்லாம் சரி, இது சமூகத்தில் சிலருக்கு மறுக்கப்படுவது ஏன்?

எல்லா உணர்வுகளைப்போலத்தானே பாலுணர்வும் அதுவும் அதனுடைய தேவைகளை அவ்வப்போது குறிப்பால் உணர்த்தும், பசித்தால் சாப்பிடும் நாம் பாலுணர்வுக்கு போடும் தடை ஏன்? சமுதாய ஒழுக்கங்களும், சமுதாய சீர்கேடும் இதில் இருக்கிறது என்பது உங்கள் வாதமாக இருந்தால், விதவைகளுக்கும், இளம் வயதில் விவாகரத்து வாங்கியவர்களுக்கும் இது மறுக்கப்படுகிறதே ஏன் ?

அவர்களுக்கு வடிகால்? இந்த சமுதாயம் எப்போதும் பாலுணர்வில் ஆண்களுக்கு சாதகமாக மட்டுமே பேசுகிறது. மனைவி இறந்தால் உடனே அவனுக்கு திருமணம், என்னக் காரணம் சொன்னாலும் அடிப்படை பாலியல் தேவைதானே? ஏன் இந்த உணர்வு பெண்ணுக்கு மறுக்கப்படுகிறது? எல்லா உயிருக்கும் பொதுவான ஒரு உணர்வு கணவன் இல்லாதவளுக்கு இருக்க கூடாது என்பது என்ன நியாயம்?

அவளின் பாலுணர்வை அடக்கவேண்டும் என்று சொல்கிறது இந்த சமுதாயம், தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் சொன்னவர்கள் இருந்த பூமி ஆனால் அந்த பசியை விட இது கொடூரமானது சமுதாய இன்னல்களைத் தரக்கூடியது.

இதற்கெல்லாம் விடை ? மறுமணங்கள் முழுமனதாய் ஏற்கப்படவேண்டும், அவர்களையும் பெண்ணாகவே கருதும் சமுதாயம் வேண்டும், ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே நியாயம் வேண்டும். திருமணத்தட்டில் ஆண் எப்படிப்பார்க்கப்படுகிறானோ அப்படியே பெண்ணும் பார்க்கப்பட வேண்டும்.

பெண்களுக்கு மகளீர்தின அனுதாபங்கள்.. ஒரு உயிரை இந்த பூமிக்குத் தரும் பெண் எந்த நிலையிலும் அவளுக்கான உரிமைகளைப் பெற முடியவில்லை..

நான் ஒரு எழுத்தாளனாய் இருந்திருந்தால் இன்னும் தொடர்ந்திருக்கலாம் என்னால் ஏனோ முடியவில்லை..

Monday, December 13, 2010

சாருவின் கோலகல விழா..

சாரு டிசம்பர் 13 புத்தக வெளியீடுன்னு சொன்னதுமே முடிவான விசயம் நான் புத்தக வெளியீட்டுக்கு செல்வது, 6 மணி விழாவுக்கு 4 மணிக்கே கிளம்பினேன், காரணம் எனக்கு காமராஜர் அரங்கம் தெரியாது, தட்டுத்தடுமாறி தி.நகரில் நண்பர் எழுத்தாளர் விஜயமகேந்திரனின் உதவியுடன் அரங்கத்திற்கு வந்து சேர்ந்தேன். சமோசா, டீ எல்லாம் முக்கியம் இல்லை முதல்ல குஷ்புவை பார்க்கணும்னு ஆசையில் நேராக அரங்கத்திற்கு உள்ளே நுழைந்தோம்.

அப்போதுதான் மனுஷ்யபுத்திரன் மேடைக்கு அழைக்கப்பட்டிருந்தார், அப்பாடா சரியான நேரத்திற்கு வந்தாச்சு அப்படின்னு ஒரு மனத்திருப்தியோட தனியே தன்னந்தனியேன்னு ஒரு சீட்டை பிடிச்சு அமர்ந்தேன்.

நான் மேடையில் பார்த்த முகங்கள் அனைத்தும் என் வாழ்நாளில் முதன் முறையாக பார்க்கிறேன். பெரும் சந்தோசம் எனக்கு 17 வருடமாய் படிப்பவன் முதன் முறையாக படைப்பாளிகளை பார்க்கும் அனுபவம் வார்த்தைகள் இல்லை விவரிக்க. என் பெயரில் பாதியை வைக்கும் அளவுக்கு பாதித்த மதனும் என் எதிரே..

நான் படிக்க ஆரம்பிக்க காரணமாய் இருந்த மதன், நான் வியந்துருகும் மனுஷ்யபுத்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், இவரின் கேள்விகுறியிலும், தேசாந்திரியிலும், அவருடன் நானும் சகப்பயணியாகவே அவருடன் பயணித்திருக்கிறேன். மிஷ்கின், நந்தலாலாவை திட்டும்போதெல்லாம் முதல் ஆளாய் எதிர்த்திருக்கிறேன். காரணம் மிஷ்கின் என்ற படைப்பாளி, அது காப்பியாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை எனக்கு அது மிஷ்கின் படம்தான். என்னைப்போல் தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கு இதுவே உயர்ந்தப்படம். தமிழ் சினிமாவில் நான் மிக எதிர்ப்பார்க்கும் ஒரு படைப்பாளி..

இவர்களை எல்லாம் நான் பார்க்க காரணமாய் இருந்த சாரு.. சாருவின் எழுத்துக்களை நான் கடந்த இரண்டு வருடங்களாகத்தான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இவரின் ராஸலீலா, எக்ஸ்டென்ஸியலிசமும் பேன்ஸிபனியனும், இந்த இரண்டுபுத்தகங்கள் மட்டுமே முழுவதும் வாசித்திருக்கிறேன். படிப்பின் என்னுடைய அடுத்தகட்டம் சாரு என்று கண்டீப்பாக சொல்வேன். சுஜாதா, ஜெயகாந்தன் காட்டிய மொழிகளுடன் மேலும் புதிய அனுபவத்திற்கான மொழியை எனக்கு கொடுத்தவர் சாரு.

உங்களை எல்லாம் சாருவின் எழுத்துக்கள்தான் வசீகரிக்கும், ஆனால் என்னை வசீகரித்தது அவரின் பெயரும் அவரின் வாழ்க்கையும்.. அவரின் படைப்புகள் எனக்கு புரிந்தாலும் புரியாமல் போனாலும் நான் அவரின் வாசகன், அவரைப்போல வாழ ஆசைப்படுபவன்.. அவர் முன் வீசப்படும் ஆபாச வார்த்தைகள் அவர் முன்பு எப்படி திரண் இன்றி சாகிறதோ அதுப்போல் என்னாலும் முடியவேண்டும் என்று ஆசைப்படுபவன்.

சரி விழாவுக்குப் போகலாம்..

பேசியவர்களின் அனைத்துக்கருத்துகளையும் இங்கு என்னால் சொல்ல முடியாது, என்னைச் சேர்த்து அணைத்தக் கருத்துக்களை மட்டும் உங்களுடன் பகிர்கிறேன்.

முதலில் மனுஷ்யபுத்திரன் பேசும்போது பாதி அரங்கம் காலியாய் இருக்கிறது என்று கவலைப்பட்டார், நிச்சயமாக வருத்தப்படவேண்டிய விசயம், தமிழ் படிப்பவனின் படிப்பு ரசனையை உயர்த்தாமலே வைத்திருக்கிறார்கள் அச்சு ஊடங்கள், தினத்தந்தியும் குமுதமும் படிப்பவன் மேலே வரவேண்டுமானால் அவர்கள் அவனுக்கு படிப்பின் ரசனையை எடுத்துக்கூற வேண்டும்..

நான் ஒரு காலத்தில் குமுதமும், ஆனந்த விகடனும் தவிர வேறு புத்தகங்களே இல்லை என்பது போல் இதுதான் எழுத்து உலகமே என்று வாழ்ந்திருக்கிறேன்.. அப்போது என் வாசிப்பிற்கு கிடைத்தவர் மதன் மட்டுமே.. காரணம் எனக்கு அடுத்த கட்டத்தை அறிமுகப்படுத்த யாருமே இல்லை, நான் கிராமத்தில் இருந்து வந்தவன், எங்கள் ஊரில் நூலகம் இல்லை, நான் படிக்க அரம்பிக்கும் போது எனக்கு கிடைத்ததெல்லாம் அதிகபட்சம் கல்கி.. எந்தசாமி புண்ணியமோ எனக்கு இணையம் பரிச்சயமான பின்புதான் நான் என்னை அடுத்தக்கட்ட வாசிப்பிற்கு நகர முடிந்தது.

நிச்சயமாய் ஒரு எழுத்தாளனின் புத்தக வெளியிடு கடற்கரையில் நடக்கும் , அதற்கான அடிப்படைகளை நாம் அடுத்த தலைமுறைக்கு கடத்தி செல்ல வேண்டியது நமது கடமை. நீங்கள் செய்த அந்த பணி இன்று நான் இந்த அரங்கிற்குள் அமரக்காரணம், இதைத் தொடர்ந்து செய்தால் நிச்சயம் சாமனியக்கும் நம் இலக்கியமும் மொழியும் சென்றடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மதன், சாருவின் மீதான அவரின் பார்வை நான் அவரை தொடர்வதாலோ என்னவோ என்னுடைய பார்வையாகவே தெரிந்தது. சாருவின் நெஞ்சு நிமிர்த்தி குற்றம் சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை, கமல்ஹாசனாக இருந்தாலும் இளையராஜாவாக இருந்தாலும் சாருவிடம் எனக்கு மிக பிடித்த விசயம் அவரின் காம்ப்ரமைஸ் இல்லாத எழுத்து, ஒரு எழுத்தாளனாய் என் எழுத்துக்களால் உன்னை துதிக்கவேண்டிய அவசியம் இல்லை என்று யாரிடமும் நீங்கள் சொல்லும் அந்த நேர்மைக்கு சிரம் தாழ்த்துவது தவிர வேறு வழியே இல்லை. சாரு சொல்வதை கொஞ்சம் மென்மையாக சொல்லுங்கள் என்று மதன் சொன்னது சாருவின் மீது அவர் வைத்திருந்த அன்பு.

மிஷ்கின் வந்தவேலையை தவறாக செய்தவர்.. ஏன் மிஷ்கின்?? இது போல் மேடை கிடைக்கும் போதுதான் பேச முடியும் என்று உங்கள் கதையை பேச தாராளமா ப்ரஸ் மீட் வைத்துஆனந்த விகடன் பேட்டியோ, குமுதம் பேட்டியோ கொடுத்திருந்தால் உலகம் முழுவதும் உங்கள் கருத்து சென்றடைந்திருக்குமே?? நான் நந்தலாலாவிற்கு கஷ்டப்பட்டேன் என்று சொன்னீர்களே?அதே போல் ஒரு எழுத்தாளனும் கஷ்டப்பட்டும் எழுதிய எழுத்துக்கள் மக்கள் கைக்கு சேரும் மேடையில் நீங்கள் செய்தது என்ன நியாயம் என்று தெரியவில்லை. சாருவின் எழுத்துக்களை நான் படிக்க வில்லை 2 பக்கம்தான் படித்தேன் அதுவே எனக்கு கிளர்ச்சியாக இருந்தது ஒரு படைப்பாளியை இதை விட நீங்கள் கேவலப்படுத்தி இருக்க வேண்டாம், நீங்கள் 50 வருடம் படிக்க புத்தகம் வாங்கி வைத்திருப்பதாய் சொன்னீர்கள் ஆனால் படிக்கிறீர்களா? என்று சந்தேகம் வருகிறது எனக்கு. நீங்கள் ஒரு 600 பக்க புத்தகம் படித்ததாக சொன்னீர்கள் "நம் முன்னோர்கள் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள்" இதைப்படித்ததும் அந்த புத்தகத்தை ஓரமாக வைத்துவிட்டேன் என்றீர்களே.. நீங்கள் எப்படி படைப்பாளி?? உங்களின் கஷ்டத்தை புரிந்து கொள்ளவில்லை என்று கஷ்டப்படும் நீங்கள், சாருவின் புத்தகத்தை சரோஜாதேவி தோற்றது என்ற போது என்ன நிலையில் அவர் இருந்திருப்பார் என்று யோசித்தீர்களா? படிக்கலன்னா படிக்கலன்னு சொல்லிட்டு போங்க.. நல்லி குப்புச்சாமி செட்டியார் சொல்லவில்லையா நான் முழுவதும் படிக்கவில்லை என்று. அதுதான் வயது முதிர்ச்சி கொடுத்த அறிவா?? உங்கள் நந்தலாலாவை பார்க்காமல் குப்பை என்று சொல்லி இருந்தால் எவ்வளவு நொந்திருப்பீர்கள்.. அந்த வேதனையை நீங்கள் சாரு கொடுத்திருக்கிறீர்கள்.

தேகம் என்ற ஒற்றை வார்த்தைக்கு இதைத்தான் எழுதி இருப்பார்கள் என்று சினிமாகாரன் புத்தியில் நீங்கள் பேசியது நீங்கள் மீண்டும் உங்கள் மீதான அபிப்பிராயத்தை உரசிப்பார்க்கவைத்திருக்கிறீர்கள்.இதற்க்காக சாரு நொந்து கொள்வாரே தவிர வருத்தப்படமாட்டார் என்று எல்லோருக்கும் தெரியும்.. இதற்க்காக சாரு கொடுத்த பதிலடி "நச்" சாரு நிவேதிதாவை படிக்க வில்லை என்றால் உங்களால் சாருவை புரிந்துகொள்ள முடியாது. சாருவின் வார்த்தையில் சொன்னால் மிஷ்கின் நுனிப்புல் கூட மேயாதவர்.
(போதும் மிஷ்கினை விட்டுவிடலாம் இது முடியாது)

அடுத்து பேச வந்தவர் எஸ்.ரா அவர் பேச்சும் என்னை சக பயணியாக்கிக்கொண்டது. எழுத்தை பேச்சிலும் கொண்டு வந்தவர்களின் நிச்சயம் எஸ்.ரா வும் இருப்பார். வதைகள் எங்கு ஆரம்பிக்கிறது என்று ஆரம்பித்து எழுத்தாளனின் அவலத்தை நினைவு படுத்திப் பகிர்ந்தார். பாலியலையும், மதத்தையும் ஏன் நாம் விவாதிக்க விரும்புவதே இல்லை என்ற அவரின் பேச்சு அருமை.

இறுதியில் சாரு நன்றியுரையுடன், தமிழ் எழுத்தாளனுக்கு ஏற்பட்ட அவல நிலை கண்டு கோபம் கொண்டார். பனகல் பார்க்கில் புல் தின்றதும், திருவல்லிக்கேணியில் எஸ்ராமகிருஷ்ணனும், தானும் சோறில்லாமல் பட்ட கஷ்டங்களையும் சொல்லி கோபப்பட்டார், சாருவின் கோபத்திற்கு தகுதியுடையதே இந்த தமிழ் சமுதாயம், பாரதி முதல் ஸ்டெல்லா புரூஸ் வரை இந்த அவலம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. வரும்காலமாவது எழுத்தாளர்களுக்கு நல்லகாலமாய் அமைய வேண்டும் என்பது என் ஆசை.

சாருவின் அத்தனைப்புத்தகங்களும் வாங்கி இருக்கிறேன். சாருவிடன் ஒரு கையெழுத்து வாங்க ஆசைப்பட்டேன், அவர் புத்தக சந்தையில் செய்கிறேன் என்று சென்று விட்டார். கையெழுத்துக்குக் காத்திருந்தாலும் கை கொடுத்ததை நினைத்துக்கொள்கிறேன். மனுஷ்யபுத்திரனிடம் கையெழுத்தை பெற்றுக்கொண்டேன்.

மதனிடன் பெற நினைத்தேன் ஆனால் விழா முடியும் வரை அவர் இல்லாததால் என்னால் வாங்க முடியவில்லை. எப்படியும் அவரையும் புத்தக சந்தையில் பிடித்துவிடவேண்டும்.

இரவே இந்த பதிவை எழுத நினைத்தேன், ஆனால் "மழையா பெய்கிறது" படிக்க ஆரம்பித்ததால் அதை முடித்துவிட்டு இதை எழுதி இருக்கிறேன்.

பின் குறிப்பு: முன்னாடி எழுதிய குஷ்பு விசயம் சும்மா ஒரு கிளுகிளுப்புக்காக சேர்த்தது. குஷ்பு வரவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் அவர் இல்லாததாலேயே என்னால் இவ்வளவு கவனிக்க முடிந்தது எனபதை ஒப்புக்கொள்கிறேன்.

முக்கியமான விசயம் : சாருவை சண்டைக்காரராக மட்டும் பார்ப்பவர்களுக்கு, அவர் ஒரு அற்புத மனிதர்.

நன்றியுரையில், விழா ஏற்பாடு செய்தவர்களை மறந்துவிட்டேன் நாளை பதிவில் சொல்லிவிட வேண்டும் என்று ஒரு கடைநிலை மனிதருக்கு நன்றி கூறவேண்டும் என்று நினைத்த நல்ல மனிதர் சாரு.

என்னிடம் படம் எதும் இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். :)

எழுத்துப்பிழைகளை மன்னிக்கவும்..


Monday, November 22, 2010

வயது முதியவர்கள்

நேற்று திருமங்கலத்தில் இறங்கி நடக்கையில் பாதையோரத்தில் கேட்ட ஐயா என்னை திசை திருப்பியது ஒரு வயது முதிர்ந்த பாட்டி என் பாட்டி வயதிருக்கும் கை நீட்டி அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். நான் கையில் இருந்த சில்லரையை அவர் கையில் வைக்கயில் அந்த பாட்டியின் கண்ணில் கண்ணீர், "பசிக்குதுயா" எதாவது வாங்கி கொடு என்றார். என்னால் அது முடியாததால் மேலும் 10 ரூபாயை கையில் வைத்து விட்டு திரும்பிப்பார்க்காமல் நடந்துவிட்டேன்.

இவர்கள் எல்லாம் எங்கிருந்து வருகிறார்கள், இவர்களுக்கு யாரும் இல்லையா?? இவர்கள் மழைவந்தால் எங்கிருப்பார்கள்? இவர்களின் பிள்ளைகள் யார்? ஏன் இந்த நிலை?? காரணம் யார்?? இவர்களின் இளம் வயது எப்படி இருந்திருக்கும்?? இவர்கள் இந்த உலகில் மேலும் வாழ விரும்பும் காரணம் என்ன?? ஒரு சக மனிதனின் வாழ்வியல் ஆதாரமான பசியைக்கூட மதிக்காத இந்த சமுதாயம் எதை நோக்கி போய் கொண்டிருக்கிறது??

எண்ணற்ற கேள்விகள் என்னுள்ளே... இதுவும் கடந்து போகுமா??

நானும் ஒரு ஞாயிறும்..

வழக்கமாக ஞாயிற்று கிழமை புத்தகத்துடன் அறையிலேயே கிடப்பது வழக்கம். நேற்றும் பாலக்குமாரனில் இரும்பு குதிரைகள் கொடுத்த குடைச்சலுக்கு பீச்சில் நின்று ஒரு தம்மடிக்க வேண்டும் போல் இருந்தது. இருந்தாலும் ஒரு நாள் பஸ்பாஸுடன் சென்னையை சுற்றிவருவது மட்டுமே நோக்கத்துடன் என் அறை நண்பனுடன் கிளம்பினேன்.

வழக்கமாக நான் பஸ்ஸில் அமைதியாக செல்லும் பழக்கம் இல்லாதவன். அதுக்காக பாட்டுப்பாடுவியான்னு கேட்காதீங்க. பஸ்ஸில் இருக்கும் ம் சுமாரான பிகருக்கு ரூட் விட்டுகிட்டே போவேன். சீட் கிடைச்சதும் புக் படிக்க ஆரம்பித்து விடுவேன். எங்க நேரம் பஸ் ஏறினதும் ஒரு சுமாரான பீஸ் கீடைச்சது என் நண்பனுக்கு அந்த பொண்ணுகிட்ட இருந்து நல்ல ரெஸ்பாண்ஸ், அதனால் அண்ணா நகர்ல இறங்க வேண்டிய நாங்கள் கிண்டிவரை செல்ல வேண்டியதாக இருந்தது. என் நண்பனுக்கு அந்த பெண் கொடுத்த கம்பெனி ஹைலி சென்சார்டு. (இதற்கு மாதர்சங்கத்திடம் இருந்து கடிதம் எதிர்ப்பார்க்கப்படுகிறது).

அதன் பிறகு என் நண்பனை ராயப்பேட்டையில் விட்டுவிட்டு சென்ற இடம் சென்னையில் புது ஷாப்பிங்க் மால் எக்ஸ்ப்ரஸ் அவென்யூ. வழக்கமாக நான் இங்கு சண்டே நடக்கும் சிறு நிகழ்ச்சிகளை பார்க்கவும், பெண்களின் தாராள மயமாக்கலை ரசிக்கவும் மட்டுமே. என்னால் அங்கு ஒரு குண்டூசி கூட வாங்க முடியாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

உள்ளாடை தெரியும் மேலாடைகளையும், உள்ளாடைகளே மேலாடைகளாக தெரிந்ததும் நன்றாகவே இருந்தாலும், நான் பார்க்க கூச்சப்பட்டேன் ஆனால் யாரும் அதை அணிய கூச்சப்பட்டவர்களாய் தெரியவில்லை. வருபவர்கள் அனைவரிடம் எதோ பணக்கார செயற்கைதனம் மிகுதியாகவே பட்டது. கட்டிபிடித்து நடக்கும் காதலர்கள், துப்பட்டா போடாத பெண்கள், டைட் டீ சர்ட்கள், மினி ஸ்கர்ட்கள், லெக்கீங்க்ஸ், இது எல்லாமே தன்னை மேல் மட்டத்தினனாக காட்டி கொள்ள போடும் வேஷமாகவே பட்டது. அவர்களின் உண்மை வாழ்க்கையை காட்ட பயப்படுகிறார்கள். உலகம் நம்மை மதிக்காமல் போய் விடுமோ என்று தயங்குகிறார்கள்.

வெளியில் 12ரூபாய்க்கு கிடைக்கும் பெப்ஸியையும், கோக்கையும் 35 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் என்ன?? தெரியல, இங்கே கிடைக்கும் பொருட்கள் சென்னையில் தரமானவை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் சென்னையில் விலை அதிகமானவை என்று சொல்ல முடியும்.

என்னால் அதற்குமேல் அங்கே இருக்க முடியவில்லை வெளியேறினேன். வெளியே வரும்போது எதிரே இருக்கும் சர்ச் வாசலில் இரண்டு வயதான பிச்சைக்காரர்களை பார்த்து உங்களுக்கு இல்லை இந்த உலகம் என்று நினைத்துக்கொண்டேன்.

மனதில் மனிதரிடையே இருக்கும் ஏற்றத்தாழ்வு குறித்து எக்கசக்கமான யோசனையில் கடற்கரைக்கு செல்ல தீர்மானித்தேன். கண்ணகி சிலையில் இறங்கி 2 ரூபாய்க்கு 62 கிலோ என்ற என் என்எடையை பார்த்துக்கொண்டேன். இரண்டு இரண்டு ரூபாயாக சேர்த்து வாழ்க்கையை வாழும் அந்த அம்மாவை யோசித்தேன். இவங்களுக்கு ஸ்பெக்ராம் தெரியுமா? ஒபாமா தெரியுமா?? தான் ஏன் இந்த நிலையில் இருக்கிறோம் என்றாவது தெரியுமா??

கடற்கரை மணலில் நடந்தேன்.. காதலுக்கு கண் இல்லை ஆனால் வயசு உண்டு.. புதிய காதலர்கள் எதிரெதிராகவும், கொஞ்சம் பழையகாதலர்கள் கைகோர்த்தபடியும், சில ஆண்டுகளாக காதலிப்பவர்கள் மடியிலும் படுத்து கொண்டு காதலித்தார்கள். இவர்களின் நோக்கமெல்லாம் தாலிக்கட்டி முதலிரவு எப்போது நடக்கும்?? அதற்கு ஒத்திகைக்கு இடம் இதுவாக இருக்க கூடாதா என்பதாகவே இருப்பதாய் பட்டது.

குதிரையில் வாக்கிங்க் போனார்கள், சேரி சிறுவர்கள் பட்டாசு வெடித்தார்கள், மற்றவர்கள் எதையாவது தின்று கொண்டிருந்தார்கள். ஏன் இப்படித்தின்னுகிறார்கள் என்றே தெரியவில்லை.?திருவிழா, வீட்டில் விசேசம், டூர் எல்லாவற்றிலுமே திண்பது என்பது தமிழனுடன் பழகிவிட்டது.ஆனால் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலை மறந்துவிட்டார்கள். சமீபத்தில் வட இந்தியர்களிடம் இருந்து பாக்கு தின்ன கற்று இருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் துப்புகிறார்கள். பார்க்கும்போதே முகத்தில் குத்த வேண்டும் என்று தோன்றுகிறது.

ஆண்கள் ஜட்டியுடன், குழந்தைகள் ஜட்டி கழண்டு போவது தெரியாமலும், பெண்கள் எதையும் மறைக்காமலும் குளித்தார்கள். பெண் போலீஸாரும் சக தோழிகளுடன் போட்டோ எடுத்துக்கொண்டார்கள். பெண்கள் குளிக்கும் இடத்தில் ஆண்கள் கூட்டமாய் ரசித்தார்கள். குடும்பத்துடன் வந்த ஆண்கள் சட்டையில்லாம தண்ணீரில் நின்று கொண்டு பெண்களையும், குழந்தைகளையும் கடலில் இழுத்துக்கொண்டிருந்தார்கள். தனியாக வந்திருந்த ஆண்களூம் நண்பர்களுடன் வந்திருந்த ஆண்களூம் பெரும்பாலும் டாஸ்மாக்கில் இருந்து வந்திருந்தார்கள். எல்லோரும் தன்னிலை மறந்த சந்தோசத்தில் இருந்தார்கள். இந்த கணம் எல்லோருக்கும் நிலைக்கட்டும் என்று வேண்டிக்கொண்டேன்.

சிறிது நேரம் நானும் அலையுடன் ஓடிப்பிடித்து விளையாடினேன், அலை சிலநேரம் என்னைப்பிடிக்க வேகமாய் வந்து கரையில் இருந்த மற்றவர்களைத் தொட்டு சென்றது. அவர்களும் அதை ஆர்பரித்தார்கள். இறுதியில் நான் விட்டுக்கொடுத்தேன் என்னை அடிக்கடி அலைத்தொட்டு சந்தோசப்படுத்தியது. நான் விட்டுக்கொடுத்ததற்காக கிளம்பும் போது என்பாதம் முழுக்க மணலை பரிசாக கொடுத்தது. எவ்வளவு மக்கள் அனைவருக்கும் தனித்தனி உலகம். நான் என் விதியை நொந்து கொள்வது போல்தானே அனைவரும் நொந்து கொள்வார்கள்.

மீண்டும் மனதில் குழப்பம் எதைத் தேடுகிறோம் எல்லோரும்?

குழப்பத்தில் கரையேறும் போது நீச்சல் குளத்திற்கு அருகில் இருக்கும் மரத்தடியில் மக்கள் கூட்டமாய் வேடிக்கைப்பார்த்துகொண்டிருந்தார்கள். நானும் கூட்டத்தோடு கூட்டமானேன். ஒரு ஜடா முடியுடன், கிழிந்து போன 3 பைகளும், கையில் 2 வாட்ச், கழுத்து நிறைய மணிகள், குளிக்காத உடம்பும், விளக்காத பல்லுமாய் ஒரு சாமியார் 3 குரங்குகளுடன் இருந்ததையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

என் மனதுக்குள் மீண்டும் குழப்பம் இவருக்கான தேடல் என்னவா இருக்கும்?? இவரும் இதே பூமியில் வாழும் ஜீவன் தானே?? இவரைசுற்றி தினமும் ஆயிரக்கண்க்கானோர் வருகிறார்கள் செல்கிறார்கள் இதையெல்லாம் இவர் எப்படி பார்ப்பார். பக்கத்தில் கடலே இருந்தாலும் குளிக்காமல் இருக்காரே?? ஒரு வேலை நம்மை பார்க்க இவருக்கு பைத்தியம் போல தெரிவோமோ?? அதிலும் தவறிருப்பதாய் தெரியவில்லை.

பிறப்பிற்கு பின் இறப்பை நிச்சயமாய் கொண்ட நாம் செய்யும் செயல்கள் பைத்தியக்காரத்தனம் தானே?? பணம், கவுரவம், மரியாதை மதிப்பு என்று வாழும் இந்த வாழ்கையின் முடிவும் மரணம்தானே??. நாம் இறந்த பிறகு எத்தனைநாள் இந்த உலகம் என்னை நினைத்திருக்கும்?? 15நாள்.. ??இறந்த பின் 15 நாள் இந்த உலகத்தில் என்னைப்பற்றி பேசுவதற்காக நாம் என் வாழ்நாள் முழுவதையும் போலியாகவே வாழ்கிறோம்.

நான் ஜெயகாந்தன், சுஜாதா, என்று பேசுகிறேன், இவருக்கு யாரைத்தெரியும், ஆனாலும் என்னைப்போல் இவரும் ஒரு ஜீவன் தானே?? மாதம் எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் போதவில்லை எனக்கும் என் குடும்பத்துக்குமே, ஆனால் தினமும் வெறுங்கையுடன் விழிக்கும் அவர் 3 ஜீவன்களுக்கு உணவளிக்கிறார். யாருடைய வாழ்க்கை உயர்ந்தது.??? கடவுளைக்கண்டது போல் இருந்தது, ஒரு நாள் முழுக்க அவருடன் இருக்கவேண்டும் என்று தோன்றியது.. அவர் எந்த ஊர் என்று கேட்டேன் சூளைமேடு பக்கம் என்றார், அப்பா அம்மா எல்லாம்?? இருக்காங்க பொண்டாட்டி பிள்ளைகளே போயிடுச்சு மத்தவங்க என்ன??

நெக்குறிகி போனேன், பெற்ற தாயை விட தன் மனைவியையும் பிள்ளையையும் நேசிக்கும் ஒரு ஜீவன், அவர்கள் இல்லை என்பதற்காக தன் வாழ்க்கையை இப்படியாக்கி கொண்டவன், இந்த மனிதனை எப்படி பார்ப்பது என்று எனக்குப்புரியவில்லை..

தினமும் இங்கேயேதான் இருப்பீர்களா என்று கேட்டுக்கொண்டு 50ரூபாயை கொடுத்தேன். அவர் நன்றி புன்னகையை பூக்கவும் இல்லை நான் எதிர்பார்க்கவும் இல்லை. வாழ்க்கையில் நான் சந்தித்த முக்கியமான நபரில் ஒருவராகத்தான் அவரைக்கருதுகிறேன்.