Monday, September 20, 2010

எப்போ திருந்தும் தமிழ் சினிமா??

என்னதான் தமிழ் சினிமா வளர்ந்துடுச்சு, நாங்க உலக சினிமா எடுக்கிறோம்னு பில்டப் கொடுத்துகிட்டாலும் அது 100ல ஒருபடம்தான் நல்ல படமா வருது… மீதி வர 99 படம் அரைச்ச மாவேதான்… நம்ம டைரக்டர் திருந்தி நல்ல படம் எப்போ எடுப்பாங்கன்னு ஒரு ஆதங்கத்துலதான் நாங்க இந்த கட்டுரையை எழுதுறோம். இது யாரையும் புண்படுத்தவோ, தனிபட்ட முறையில் காயப்படுத்தவோ அல்ல…

ஸ்கூல் போற பசங்க, ஸ்கூல் முடிச்சுட்டு காலேஜ் போறவங்க, இவங்கதான் லவ் பண்ணவே பொறந்தமாதிரி உங்க கதைல எப்போ பார்த்தாலும் விடலைகள வச்சே காதலிக்க வைக்கிறீங்களே, இதை பார்த்துட்டு ஊர்ல படிக்கிற பசங்க எல்லாம் நமக்கும் ஒரு பிகர் சிக்காதான்னு சுத்திட்டு இருக்காங்களே… எல்லாத்துக்கும் காரணம் நீங்க தானே ??


இது வரைக்கு சினிமா ஆரம்பிச்ச காலத்துல இருந்து காதலை தவிர வேற எதாவது உருப்படியா சொல்லி இருக்கீங்களா?? அட காதலையாவது ஒழுங்கா சொல்லி இருக்கீங்களா?? வயசுக்கு வரது முன்னாடியே காதலிக்கிறது, 8 வயசுல டூயட் பாடறது இதெல்லாம் எந்த ஊர்ல சார், ஏன் ஊரை கெடுக்கிறீங்க?? பருத்தீவீரன், பூ, இந்த படங்கள்ல காதலிக்கும் போது நாயகிகளின் வயசு என்ன?? உங்க வீட்டு பெண் இந்த வயசுல காதலிச்சா நம்ம பொண்ணுக்கு காதலிக்கிற அளவுக்கு பக்குவம் இருக்குன்னு உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா??

சமீபத்தில்வந்த களவாணியில் ஸ்கூல் யூனிபார்ம் பொண்ணை லவ் பண்ற மாதிரி கதை, இந்திய சட்டமே 18வயதுக்கு மேல்தான் பெண்களின் திருமண வயதுன்னு சொல்லுது ஆனா நீங்க ஸ்கூல் போற பொண்ணுக்கு கல்யாணம் ஆகற மாதிரி படம் எடுக்கிறீங்க?? காதல் சொல்ல வந்தேனில் கல்லூரிக்கு செல்லும் முதலாமாண்டு மாணவன் தன்னோட சீனியர் பொண்ணை லவ் பண்றான். எப்போதான் ஒரு மெச்சூர்டான காதலை படம் எடுப்பீங்க?

ஏன் சார் உங்க கதைல நல்லவங்களுக்கு காதலே வராதா?? ரவுடி, பொறம்போக்கு, அடியாளு, வெட்டியா சுத்துறவன் இவனுங்களையா பார்த்து தேடி பிடிச்சு கதாநாயகிங்க லவ்வுறாங்களே இது சாத்தியமா? உங்க ஹீரோயின்கள் எல்லோரும் ரவுடிகளை லவ் பண்றதால நம்ம பசங்க எல்லோரும் நாங்களும் ரவுடிதான்னு ரவுசு விட்டு வாழ்க்கைய கெடுத்துக்கிறது உங்களுக்குத் தெரியுமா??

பார்த்ததும் லவ் பண்ணிட்டு, ஹீரோ நல்லவன் வல்லவன்னு அப்பன் கூட அவன் என்னை நல்லா புரிஞ்சவன் அவன் கூட இருந்தாதான் நான் சந்தோசமா இருப்பேன்னு வசனம் பேசுறது ஏன்?? ஹீரோயினை பார்த்ததும் லவ் பண்ணிட்டு உன்னை நான் உன் உடம்பை பார்த்து லவ் பண்ணலன்னு வசனம் பேசுறீங்களே ஹீரோ எப்படி? நீங்க இப்படி உசுப்பேத்துறத பார்த்து ஊருக்குள்ள பாதிப்பேர் பாத்ததும் வர்றதுதான் மச்சி லவ்ன்னு வசனம் பேசி வாழ்க்கைய கெடுத்துகிறாங்களே அதுக்கு காரணம் நீங்கன்னு ஒத்துப்பீங்களா?

எவ்ளோ பெரிய ரவுடியா இருந்தாலும் க்ளைமாக்ஸ் 4 நிமிசத்துல ஹீரோயின் பேசுற மொக்கை வசனத்துல திருந்துறாங்களே ஏன்?? சொந்த புத்தியே கிடையாதா??

குடும்பக் கதை எடுக்கிறேன்னு நீங்க கொல்றது அதுக்கு மேல, மூத்தவர் ரொம்ப நல்லவர், இளைவர் எதுக்குமே ஆகாதவர் இவர்தான் ஹீரோ, அண்ணன் நல்லா இருக்கவரைக்கும் இவர் திருந்தவே மாட்டார், அப்புறமே தனியா நின்னு குடும்ப மானத்தை காப்பத்துவார், குடும்பமே இவரைப்பாராட்டும்… இன்னும் எவ்ளோ நாளைக்கு??

ஊர்ல ஒரு பெரிய மனுசன் அவருக்கு பிள்ளையோ, தம்பியோ ஹீரோ, அந்த பெரிய மனுசன் போனதும் இவர் வில்லனை பழிவாங்குவார் உஷ்ஷப்பா… முடியல…

ஆட்டோ ஓட்ற ஹீரோ, வேலைப் பக்கம் தலை வச்சு கூட படுக்காத ஹீரோ, குடிசை வீடுதான் ஆனா ரேபான் கிளாஸ், ரீபக் சூ, ரேமண்ட் சர்ட் தான் போடுவாரு யோசிங்க டைரக்டர் சார். எந்த கதையா இருந்தாலும், ஆப்பம் விக்கிறவ, வெத்தலை விக்கிறவ, வேலைக்காரி, டீச்சர் இப்படி உங்க பலான மேட்டரை கொண்டு வந்து சொருவுறத எப்போ சார் நிறுத்துவிங்க??

பெண் புரட்சி, பெண்ணியம், என் கதாநாயகி புதுமை பெண் அப்படின்னு எல்லாம் பேசிட்டு ஹீரோயினுக்கு தம்மாதூண்டு டிரெஸ் போட்டு டூயட் பாட கூட்டிட்டு போயிடுவிங்க, அவ்ளோ நல்லவரா நீங்க??

இல்ல தெரியாமதான் கேட்கிறேன் ஹீரோவோட தங்கச்சிய வில்லன் கெடுத்துட்டான்னா ஹீரோ கெடுத்தவன்கிட்ட போய் என் தங்கச்சிய கட்டிகோங்கன்னு கெஞ்சி கேட்கிறத விட கேனத்தனம் எதும் இல்லன்னு உங்க மண்டைல ஏறாதா??

நீங்க பலான கதைய எடுத்து யாராவது கேள்வி கேட்டால் ஊர்ல நடக்கிறதைதானே எடுக்கிறோம்னு நியாயம் பேசுவிங்க, ஊர்ல மக்களுக்கு சொல்றது நல்ல விசயம் எதும் நடக்கிறதே இல்லையா என்ன???

எந்த படம் எடுத்தாலும் இது வரைக்கு தமிழ் சினிமாவுல யாருமே செய்யாத கதைன்னு சொல்வீங்க… ஆனா ஆயா வடை சுட்ட கதையவே எடுப்பீங்க… ஏன் சார்??

எப்படிங்க உங்க ஹீரோயின் ஊர்ல இருக்க எல்லோருக்கும் புத்தி சொல்லிட்டு ஒரு ரவுடிய, பொருக்கியா பார்த்து தேடி பிடிச்சு காதலிக்கிறீங்க? அதும் ஹீரோ பஸ்ல பக்கத்துல இருக்க பாட்டிக்கு சீட் கொடுத்ததும் உங்க ஹீரோயின் லவ்வை ஆரம்பிச்சுடுவாங்க எப்படிங்க??

ஒரு ஊர்ல 2 ப்ரெண்ட்ஸ் ஊர்ல வேற பொண்ணுங்களே இல்லாத மாதிரி 2 பேரும் ஒரே பொண்ணை லவ் பண்ணுவாங்க, கடைசியா பிரெண்ட் ஷிப் தான் மச்சின்னு 2 பேரும் லவ் பண்ண பொண்ணு வேணாம்னு முடிவு பண்ணுவாங்க, அடபாவிங்களா?

தயாரிப்பாளர்களே நீங்க பணம் சம்பாதிக்கணுங்கறதுக்காக படத்துல பலான விஷயங்களை சேர்க்க சொல்றது நியாயமா?? கேட்ட அது கதைக்கு ரொம்ப அவசியமான சீன் அப்படின்னு ஒரு டெம்ளேட் வசனம் வேற.. ஹீரோயின் நீச்சலுடைல வருவதும், எதிர் வீட்டு ஆண்ட்டி பெருக்குறத குனிஞ்சு பார்க்கிறதும் கதைக்கு ரொம்ப அவசியமா சார்??

நீங்க உலகத்துலயே முதன் முறையான்னு சொல்ற படமெல்லாம் உலக தொலைகாட்சி வரலாற்றில் முதல் முறையாகன்னுதான் ரிலீஸ் ஆகுது ஏன்னு எப்போவாவது யோசிச்சிருக்கீங்களா??

கடைசியா ரசிகர்களுக்கு :

நீங்க கொடுக்கிற காசுக்கு நடிக்கிறவங்கதான் சினிமா கூட்டம், அவங்க பண்ற தப்புக்கெல்லாம் ரசிகர்கள் அதைத்தான் விரும்புறாங்க அதனாலதான் எடுக்கிறோம்னு அவங்க உங்க மேல குற்றம் சொல்றாங்க, நீங்க ஏன் இப்படி இருக்கீங்க?? நல்ல படங்களை ஓட வைங்க, மசாலா குப்பைகளை தூக்கி எறிஞ்சா அவங்க அந்த மாதிரி படம் எடுக்கணும்னு நினைக்ககூட மாட்டாங்க..

இதெல்லாம் ரொம்ப சின்ன லிஸ்ட், இதுமாதிரி ஆயிரமாயிரம் கேள்விகள் உங்களுக்குள்ள இருக்கலாம்.

அதை கமெண்டா போடுங்க, அட்லீஸ்ட் இதெல்லாம் படிச்சு அடுத்து படம் எடுக்க போற ஒரு படைப்பாளி திருந்தினாலும் சந்தோசமே…

தேசிய விருது – கமலுடன் மோதும் நடிகர்கள் சின்ன அலசல்

57 வது தேசிய விருதில் சிறந்த நடிகராக அமிதாப் அறிவிக்கப்பட்டதும் இந்திய திரை ரசிகர்களின் பல்ஸ் தானாகவே அதிகமாகி விட்டது. காரணம் இதுவரை சிறந்த நடிகர்களுக்காக3 முறை தேசிய விருது வாங்கியவர்கள் கமலும், மம்முட்டியும் மட்டுமே, ரேஸில் பின்னாடி வந்து கொண்டிருந்த அமிதாப் திடீரென்று இவர்களுக்கு சரியாக ஓட ஆரம்பித்திருக்கிறார். இவர்களை முந்துவாரா?? இல்லை இவர்களின் ஒருவர் முந்துவாரா என்று காத்திருந்து பார்க்க வேண்டும்.. இந்த மூவரை பற்றிய சிறிய அலசலே இந்த கட்டுரை;


அதிரடி கமல்

முதல் படத்திலேயே தேசிய விருதை பறித்தவர் கமல் ஹாசன், களத்தூர் கண்ணம்மாவுக்காக சிறந்த குழந்தை நட்சத்திரமாக விருதை வாங்கினார், அதன் பின்பு சிறந்த நடிகருக்காக, முன்றாம் பிறை, நாயகன், மற்றும் இந்தியனுக்காக அவர் விருதை பெற்றார் இதன் பின்பும் பெரிது எதிர்பார்க்கப்பட்ட படங்களுக்கு விருதுகள் கிடைக்கவில்லை.

கமல் 1996 இந்தியனுக்கு பிறது தேசிய விருதை வாங்க வாங்க வில்லை, அதன் பின்பும் ஹேராம், அன்பே சிவம், விருமாண்டி போன்ற படங்கள் இறுதி வரை சென்றாலும் விருது கையில் வர வில்லை.

தேசிய விருதுக்கு இவரின் 7 படங்கள் இறுதி வரை வந்திருக்கிறது.

தேசிய விருதில் மட்டுமே இவருடன் போட்டி போட அமிதாப்பும், மம்முட்டியும் இருக்கிறார், இதை தவிர்த்து இவர் வாங்கிய விருதுகளுக்கு யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாது. இவர் பிலிம்பேர் விருதை 19 முறை வாங்கி இருக்கிறார், தமிழுக்காக 13, தெலுங்கில் 3, கன்னடத்தில் 2, மலையாளத்தில்1, தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் வாங்கிய ஒரே ஒருத்தர் இவர் மட்டுமே. இதுமட்டும் இல்லாமல் இவரின் தேவர் மகன் ஹிந்தி பதிப்பான “விரசத்”காக சிறந்த கதைக்கு ஹிந்தியிலும் விருது வாங்கி இருக்கிறார்.

இவர் தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை 11 முறையும், ஆந்திர அரசின் நந்தி விருதை 3 முறையும், வாங்கியுள்ளார்.

இவரின இயக்கத்தில் வெளிவந்த ஹேராம் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் வெளியானது ஆனால் அந்த படம் பொருளாதார ரீதியாக தோல்வியடைந்தாலும் இன்றும் தமிழ் சினிமாவின் மைல்கல் படங்களின் அதும் ஒன்று.

இந்தியாவில் இருந்து ஆஸ்கரின் கதவை 7 முறை தட்டியவர் இவர் மட்டுமே. ஆனாலும் இவருக்கு ஆஸ்கர் மீது விருப்பம் இல்லை என்பதை வெளிப்படையாகவே தெரிவித்துவருபவர்.

இது தவிரவும் இவரின் விருதுகள் எக்கசக்கம்.

லேட்டாக அசத்தும் அமிதாப்

இவரும் கமலைப்போலவே முதல் படத்திலேயே சிறந்த புதுமுக நடிகருக்காக தேசிய விருதை வாங்கியவர், அதன் பின்பு 1991 ல் சிறந்த நடிகருக்கான தேசிய விருது இவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் அதன் பின்பு 15 வருட இடைவெளிக்கு பின்பு ப்ளாக் படத்திற்காக அவர் மீண்டும் சிறந்த நடிகராக தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். பின்பு சென்ற வருடம் வந்த பா படத்தில் அவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது இப்போது அந்த படம் அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 3வது முறையாக பெற்றுத்தந்துள்ளது.

இவரை ஒரு பிலிம் பேர் கிங்க் என்று சொல்லலாம், இது வரை 29 முறை பிலிம் பேரில் சிறந்த நடிகருக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார், 13 முறை வாங்கியும் உள்ளார், இது வரையும் இது சாதனையே, இது மட்டும் அன்றி 9 முறை சிறந்த துணை நடிகருக்காகவும் பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்க்ப்பட்டுள்ளார் இதுவும் சாதனையே..

இதுமட்டும் அல்லாமல் சிறந்த பாடகருக்காகவும் ஒரு முறை தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அதனால்தான் அவர் பிக் “பி

மம்முட்டி

மலையாள திரையுலகின் சிறந்த நடிகர்களில் இவரும் ஒருவர் இவர் 1990ல் முதல் தேசிய விருதை பெற்றார், பிறகு 1994 ல் சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது, அதன் பின்பு 1999ல் டாக்டர் அப்பேத்கர் என்ற ஆங்கில படத்தில் நடித்தமைக்காக தேசிய விருதை வாங்கி இப்போது களத்தில் உள்ளார், பழசி ராஜாவுக்காக இவர் தேசிய விருதை வாங்கி இருந்தால் இவர் இன்று கமலை முந்தி இருப்பார், இவர் விட்டதால் இன்று அமிதாப் மேலும் ஒரு போட்டியாளராக சேர்ந்துள்ளார்.

இவர் கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதை 7 முறையும், பிலிம்பேர் விருதை 8 முறையும் பெற்றவர். இவரின் பழசி ராஜாவில் இசையமைத்தற்கு இளையராஜாவுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

இந்த ரேஸில் முவ்வருமே நேர்க்கோட்டில் இருக்கிறார்கள், கமல் அடுத்து மன்மதன் அம்பு செய்கிறார் இது காமெடி படம் என்பதால இதில் தேசிய விருதுக்கான வாய்ப்பு மிக குறைவே.

ஆமிதாப்பின் 3 படங்கள் தயாரிப்பில் உள்ளது, சமீபகாலமாக அவர் கதை தேர்வில் மிக அக்கறை எடுத்து செய்வதால் அவரின் படங்கள் அவருக்கு பேரையும் விருதையும் வாங்கித்தருகிறது. அதற்கு கடைசி 5 வருடங்களில் அவர் வாங்கிய 2 தேசிய விருதுகளே சாட்சி.

அடுத்து மம்முட்டி, மலையாள திரையுலகம் சமீப காலமாய் கமர்ஷியல் பக்கம் திரும்பியதாலும் அங்கு உள்ள திரையுல நிலையும் நல்ல படங்கள் வருவதற்கு சாதகமாக இல்லை என்பதால் இவர் ரேஸில் சற்று பின் தங்குகிறார்..

தற்போதைய நிலையில் ரேஸில் அமிதாப் முன்னிலை வகிக்கிறார்.. முடிவு வந்த பிறகுதான் தெரியும்..


நறுமுகைக்காக

கண்ணதாசனின் நடந்த கதை..

நான் சமீபத்தில் முடித்த ஒரு நாவல், எனக்கு தெரிந்து நான் படித்த மோசமான நாவல்களில் ஒன்றாகதான் இதை கருதுகிறேன். எந்த உள்தேடலும் இல்லாமல் சாதாரணமாக ஒருதட்டு மக்கள் மேல் குற்றம் கூறி செல்கிறார் கண்ணதாசன் அதை என்னால் ஏற்க முடியாது. ஒரு பெண் விபச்சாரத்தையும் முறைகேடான உறவையும் விரும்பியே செய்வதாக சொல்கிறார். இந்த கதையின் நாயகன் மீது நமக்கு பரிதாபம் வரவேண்டும் என்பதற்காகவே கதையில் கதாநாயகன் சார்ந்த உறவுகளை கெட்டவர்களாக காட்டுவது எவ்விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

கதை என்றால் அப்படித்தான் எழுத்தாளனின் சுதந்திரத்தில் தலையிட கூடாது என்பதை நான் ஏற்கிறேன். அது எழுத்தாளன் சொல்லும் விசயம் சரியாகவும அது ஆராய்ந்தும் எழுதி இருக்கும் பட்சத்தில் விரும்பி விபச்சாரம் செய்வதாகவும், தந்தையுடன் தவறாக இருப்பதாகவும் சொல்லும் இவர் அந்த கதாபாத்திரத்தையும் சற்று பேச விட்டிருக்கலாம் காரணம் என்னவென்று தெரிந்திருக்கும்.

இந்த புத்தகத்தை படித்து முடிக்கும் போது எனக்குள் எவ்வித பாதிப்புமே நிகழவில்லை. மாறாக கண்ணதாசன் மீது சற்று கோபம்தான் வந்தது.

மேலும் ஒரு கடுப்பு, இது புது புத்தகமே 20ரூபாய் தான் இதை நான் பாரீஸில் பழைய புத்தக கடையில் 20 ரூபாய்க்கு வாங்கினேன்.

Tuesday, September 14, 2010

நன்றி மறந்த ஷங்கர்

10 வருடங்களுக்கு முன்பு எந்திரன் கதையை ஷங்கருக்கு கொடுத்தவர் சுஜாதா. கமல் செய்வதாக இருந்த ரோபோ, பிறகு ஷாருக்கான் வசம் போனது, அவருக்கும் ஷங்கருக்கும் தயாரிப்பில் பிரச்சனை வர, ஐங்கரனை வந்து சேர்ந்தது ரோபோ, ஷங்கரின் பட்ஜெட்டிலும் செலவிலும் ஆடிப்போன ஐங்கரன் கை விரித்து விட வேறு வழியே இல்லாமல் சன்னை தஞ்சமடைந்தார் ஷங்கர், இவ்வளவு மெனக்கெட்டிருந்தாலும் ஷங்கர் நன்றி மறந்தது நியாயமா??

மலேசியாவில் கேசட் வெளியிடும் போதே எதிர்ப்பார்த்தேன் இந்த படத்தில் சுஜாதாவின் பங்கை வெளிப்படுத்துவார்கள் என்று, ஆனால் யாரும் வாயே திறக்க வில்லை, சுஜாதா இறந்ததும், அவர் தனக்கு எந்திரனின் முழு ஸ்க்ரிப்டை முடித்து கொடுத்து விட்டார் அதனால் எந்த பிரச்சனையும் கிடையாது என்று சொ ன்ன ஷங்கர், படம் முடியும் போது மறந்தது ஏன்?

சன்பிச்சர்ஸ்க்கு இணை கிடையாது, ஷங்கர் தான் உலகின் உயர்ந்த டைரக்டர், ரஜினி உலகத்திலேயே ஒருத்தர்தான், எந்திரனில் வேலை பார்த்த லைட் மேன் கூட உலகில் சிறந்த லைட் மேன் என்ற ரேஞ்சுக்கு கிடைப்பவர்களூக்கு எல்லாம் ஜால்ரா தட்டுவதை பொழப்பாக வைத்திருக்கும் வைரமுத்து, சக எழுத்தாளனை மறந்தது ஏன்?? வைர முத்துக்கு மனசே கிடையாதா??

தாளாத நிலையிலும் சுஜாதா எந்திரனுக்காக எழுதினார் என்றது இவர் சொல்லியே எல்லோருக்கும் தெரியும் ஆனால், படம் முடிந்ததும் மறந்தது ஏன்??

சுஜாதா என்ற படைப்பாளியின் திறமை யை தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் பயன் படுத்திக்கொண்டவர் ஷங்கர், என்னதான் பிரம்மாண்டம் என்று படம் காட்டிகொண்டிருந்தாலும் சுஜாதாவின் கற்பனையே அதற்கெல்லாம் காரணமாக இருந்திருக்கிறது..

சுஜாதா போன்ற படைப்பாளி அருகில் இல்லையென்றால் இன்று எந்திரன் எடுக்கும் அளவுக்கு ஷங்கர் வளர்ந்திருக்க முடியாது. இன்றைக்கு எந்திரனுக்கு கிடைக்கும் அத்தனை எதிர்ப்பார்ப்புக்கும் மையமாக இருந்தவர் சுஜாதா.

எந்திரன் வெளிவந்து ஷங்கரின் இயக்கத்தை விட சுஜாதாவின் வசனங்களும் அவரது பங்களிப்பும் அதிகம் பேசப்படும் போது உணர்வார் ஷங்கர். கண்டீப்பாக இது நடக்கும்..


நறுமுகைக்காக

ரஜினி காணாமல் போவார்..

தலைப்பை பார்த்து குதிப்பவர்கள் முழுவதும் படிக்கும் வரை காத்திருக்க கேட்டுக்கொள்கிறேன்.

1975 ல் அபூர்வ ராகங்களில் கதவை திறந்து கொண்டு தமிழ் சினிமாவுக்கு வந்தவர் ரஜினி, அதன் பிறகு அவரின் கேரியரில் இதுவரை அவரின் இடத்திற்கு யாரும் போட்டியும் போடவில்லை, அவர் இடத்தை வேறு யாருக்கும் விட்டு தரும் நிலையும் வரவில்லை.

தமிழ் சினிமாவை பொருத்தவரை ரஜினி ஒரு மறக்க முடியாத சக்தி, இவரின் ஸ்டைல் மட்டுமே இவரின் ரசிகர்களை கட்டி போட்டு வைத்திருக்கிறது என்றால் இது மிகையல்ல.

இது வரை 153 படங்களை நடித்து முடித்திருக்கிறார் ரஜினி, இதில் கன்னடா, தெலுங்கு, பெங்காலி, ஹிந்தி போன்ற மொழிப்படங்களும் அடக்கம்.

16 வயதினிலே படத்தில் ரஜினியின் அட்டகாசமான நடிப்புடன் கூடிய ஸ்டைல் அனைவரையும் கவர்ந்தது. அதுவே அவருக்கு பெரிய திருப்பு முனையாகவும் அமைந்தது. அதற்கு பின்பு அவரின் இத்தனை படங்களில் அவரின் நடிப்புக்கு தீனி போடும் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

இது வரை அவரை நல்ல நடிகராக மக்களுக்கு காட்டிய படங்கள் இரு கைவிரல்களுக்குள் அடங்கிவிடும். என்னதான் தன்னுடைய ஸ்டைல் மக்களிடையே பிரபலம் என்றாலும் நல்ல படங்களைத் தேடி நடிக்காதது ஒரு நடிகனாக ரஜினியின் தோல்வியே.

இதற்கு முன்பு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் தியாகராஜபாகவதர். அவர் பல திறமைகளில் கொடிகட்டிப்பறந்தவர். ஆனாலும் தமிழ் சினிமாவின் வரலாற்று அழிவில் சிவாஜி, எம்ஜிஆர் காலத்தில்தான் தமிழ் சினிமாவின் காலங்களே தொடங்குவதாக எண்ணிக்கொள்ளத் தோன்றுகிறது; அப்படி பார்த்தோமானால் சினிமாவை சரியாக தன் சொந்த வாழ்க்கைக்கு பயன் படுத்திக்கொண்டவர் எம் ஜி ஆர். ஆனால் தமிழ் சினிமாவின் ரசிகர்களால் சிறந்த நடிகராக பார்க்கப்பட்டவர் சிவாஜி.

சிவாஜி மற்றும் எம் ஜிஆர் இருவரும் சம அளவு ரசிகர்களை கொண்டிருந்தாலும் காலம் கடந்தவர்கள் சினிமாவை பார்க்கும் போது மாஸ் ஹீரோக்களோ தயாரிப்பாளர்களை வாழவைத்தவர்களோ மட்டுமே சிறந்த நடிகராக இருக்க முடியாது. சிறந்த நடிகர் என்றால் இன்னமும் எம் ஜி ஆரை பின்னுக்குத்தள்ளி சிவாஜி வந்து நிற்கிறார். காலப்போக்கில் தமிழக முதல்வராக மட்டுமே எம்ஜி ஆர் பாக்கப்படுவார் சிறந்த நடிகராக சிவாஜியே இருப்பார்.

இந்த விசயத்தை பார்க்கும் போது ரஜினி, எம்.ஜி. ஆர் வரிசையில் வருகிறார், இவரால் வாழ்ந்த தயாரிப்பாளர்கள் நிறைய, இவரின் ஸ்டைலுக்கு ரசிகர்கள் எக்கசக்கம், ஆயினும் இவரால் எம்.ஜி ஆரைப்போல் தனக்கு கிடைத்த வரவேற்ப்பை காலம் கடந்து வைத்துக்கொள்ளும் நிலைக்கு மாற்றிக்கொள்ள முடியவில்லை. அதற்கான வாய்ப்பு 1996 ல் வந்தாலும் அதை சரியான முறையில் கையாளாமல் விட்டு அது கை நழுவிப்போனதும் அனைவரும் அறிந்ததே.


1990 க்கு பிறகு கடைசி 20 வருடங்களில் அவர் நடித்த படங்கள் தளபதி, மன்னன், அண்ணாமலை, பாண்டியன், உழைப்பாளி, வீரா, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா, பாபா, சந்திரமுகி, சிவாஜி. இதில் பாபா, பாண்டியன் தவிர அனைத்து படங்களுமே வெற்றிப்படங்கள். ஆனால் இதில் ரஜினியில் நடிப்பு பேசப்பட்டது தளபதி, பாட்ஷாவில் மட்டுமே. ரஜினியின் ரசிகர்கள் மற்றப்படங்களையும் கண்டீப்பாக மெச்சுவார்கள்.

ஆனால் காலங்கடந்த ரசிகர்கள் இந்த படங்களை பார்க்கும் போது மிக மட்டமான படமாகத்தான் தெரிகிறது. இதற்கு காரணம் இவர் எப்போதும் போன தலைமுறை மக்களுக்காகவே படம் எடுக்கிறார். அடுத்த தலைமுறை மக்களை அவர் கண்டுகொள்வதே இல்லை.

இன்று வரை இவரின் சிறந்த படமாக பார்க்கப்படுவது 16 வயதினிலே, முள்ளும் மலரும், எங்கேயோ கேட்ட குரல், மூன்று முகம். இதில் எல்லாம் இவரின் நடிப்பு தனி முத்திரை பதிக்கும் வகையில் அமைந்திருக்கும். இப்படி ஒரு ரஜினியை இப்போதெல்லாம் தேடினாலும் கிடைக்க வில்லை…

இவரின் சகநடிகரான கமலஹாசன் தயாரிப்பாளர்களால் பெரிதும் விரும்ப படாதவராக கூட இருக்கலாம், ஆனாலும் இவரின் மைல்கல்கள் இவரை எதிர்கால சினிமா விரும்பிகளை வசியப்படுத்தி வைத்திருக்கிறது. கமலின் படங்கள் எப்போதும் ரசிகனை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதாகவே அமைகிறது, அவர் செய்யும் நகைச்சுவைப்படங்கள் உட்பட.

குணா படம் வந்த போது பார்க்காதவர்கள் ஏன் அப்போது பிறக்காதவர்கள் கூட இன்று அந்த படத்தை மெய் சிலிர்க்க பார்க்கிறார்கள். அந்த படம் அப்போது மக்களிடையே தோல்வி படமாகவே அமைந்தது. அப்போதைய ரசிகர்களின் மனநிலை, அதே போல் அன்பே சிவமும், விருமாண்டியும் கூட சொல்லலாம்.

அதற்காக கமல் கமர்ஷியல் படங்கள் தரவே இல்லையா என்று கேட்கலாம்… ஆனால் நான் நடித்த கமர்ஷியல் படங்களை நானே பார்க்க விரும்ப வில்லை என்பதை அவரே சொல்லி அவருக்கான தனிப்பாதையும் அமைத்திருக்கிறார். இங்கு அவரின் காப்பி அடித்தல் திறமையை பேசுவது சரி ஆகாது.

ரஜினி என்ற ஸ்டைல் புயல் நீண்ட நாட்கள் தமிழ் சினிமா மனதில் நிற்காது. அதன் காரணம் ரஜினியும் கமர்ஷியல் என்ற புயலில் அடித்துச்செல்லப்பட்டு விட்டார், ஹிந்தியில் கடைசி காலங்களில்ஆமிதாப் வயதுக்கான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தன்னை ஒரு நல்ல நடிகனாக காட்டிக்கொண்டுள்ளார்.

அமிதாப்பின் அடுத்த தலைமுறையான அமீர்கான், ராஜா ஹிந்துஸ்தானி வரை டூயட் பாடிக்கொண்டிருந்தவர், அதன் பின்பு தனக்கான களம் அது அல்ல என்று புரிந்து பெப்லீ லைவ் வரை வந்துள்ளார், இது போன்ற படங்களை எல்லாம் ரஜினி யோசித்து கூட பார்த்திருக்க மாட்டார் என்பது நிச்சயம்.

இத்தனை வயதுக்கு பின்பும் ரஜினி எந்திரன் போன்ற கமர்ஷியல் சினிமாவில் நடிக்க வேண்டிய அவசியம் என்ன?? வசூல் ரீதியாக எந்திரன் பேசப்படலாம், டெக்னிகலாக பேசப்படலாம், ரஜினியில் நடிப்பு?? கேள்விக்குறியே??

நறுமுகைக்காக


Thursday, September 9, 2010

பிள்ளையார் சுழி


நானும் ஒவ்வொரு முறை வலைபூ எழுதணும் ஆரம்பிச்ச நாள்ல இருந்து என் கீ போர்ட் என்னிடம் பிடுங்கப்படுகிறது.. ஏன்?? கொய்யால போதும்டா சீன் எழுத தெரியலனாலும் சீன் ஓவரா போடதன்னு நீங்க சொல்றது வாஸ்தவம் தான்..

என்ன பண்றது ஸ்டெத்ஸ் பிடிச்சவன் எல்லாம் டாக்டரும் இல்ல, கீ போர்ட் பிடிச்சவன் எல்லாம் ரைட்டரும் இல்ல.. என்னை இந்த ௨ பாரா எழுத ஊக்குவித்த என் குலதெய்வம் லக்கிலுக் அவர்களை மனதில் கொண்டு இனியொரு சதி சாரி விதி செய்வோம்.. இது என்னனு கேட்காதீங்க இனிமே எழுதலாம்னு இருக்கேன்னு சொல்றதுக்கு நான் கொடுக்கும் பில்ட் அப் (இதற்கான தமிழ் வார்த்தை யோசித்தலில் இரு நிமிடம் வீணாகி விட்டதில் நான் பெரும் துன்பம் அடைகிறேன்)

எல்லோரும் தொடர வாழ்த்துங்கள்..